புதன், 17 நவம்பர், 2010

எனையாளும் காலம் எப்போ...

கடன்பெற்ற கொடுமைக்காய்
கடல்கடந்து போனாயே
உடன்வாழ வந்தநான்
உறைந்ததங்கு அறிவாயோ...

உண்ணுகின்ற போதிலும்
உறங்குகின்ற போதிலும்
எண்ணுகின்ற மனதிற்க்கு
என்னவுண்டு ஆறுதல்,

விட்டுப்போன நினைவுகள்
தொட்டுத்தொடரும் கனவுகள்
கட்டிவைத்தது ஆயிரம்
கொட்டித்தீர்ப்பது யாரிடம்,

பாய்விரிக்கும் போதெல்லாம்
நீயணைத்த ஞாபகம்
மெயசிலிர்க்கும் நொடிகளெல்லாம்
கைதீண்டிய நினைவுகள்...

வாய்பிறந்த வார்த்தைகள்
போய்மறைந்த வசந்தங்கள்
நீயிருந்த பொழுதுகள்
நிழலாடும் கனவுகள்...

வளருகின்ற உறவை
உறுதியிட்ட தருணம்
மலருகின்ற நினைவை
மறைத்திட்ட கொடுமை,

முகம்பார்த்து பேசிபேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,

சொட்டுவிழி பொருங்கடலில்
சோகங்களைக் கரைக்கின்றேன்
மட்டும்மனம் தவிக்கின்றேன்
மறைத்துதினம் நடிக்கின்றேன்...

எங்கேயோ நீயிருந்து
எமக்காகப் போராட
இங்கேயே நானிருந்து
இருவிழியில் நீராட,

மடிமீது சாய்ந்தயர்ந்து
மனம்போலே வாழ்ந்துயர்ந்து
மனையோடு நீயிருந்து
எனையாளும் காலமெப்போ...

-வேலுச்சாமி

சனி, 23 அக்டோபர், 2010

கொண்டாடத்தான் வேண்டுமா தீபாவளி

ஊரிழந்து உறவிழந்து
புதையுண்டு வதையுண்டு
மாண்டவர் போக மீதம்
மீண்டவரும்
மீளாத்துயரில்...

கருவிலிருந்து உறவு
கடந்துவரும் முன்னே
கருவழித்தவன் இன்னும் உயிரோடு...

வெறியர்கள்
விட்டுச்செல்லும்
வக்கிரக் கழிவுகளைச்
சுமக்கும் குப்பைத் தொட்டிகளாய்
நம் சகோதரம்...

இனமழிய குழிபறித்த
ஈனக்கருணாக்கள்
கண்முன்னே...

சிதறுண்ட பதறுகளாய்
கதறுண்டு பார்முழுதும்
பறந்து சென்ற
உறவுகள்...

உறவென்ற உரிமை
உள்ளிருந்தும்
உடனிருந்து உதவயியலா
ஊனமாய் உறவுகள்...

நரகவேதனையில் நம்உறவுகள்
நரகசுரன் இன்னும் உயிரோடு
நமக்கேன் தீபாவளி...

கருவாகும் உறவுக்கும்
காதினில் உரைத்திடுவோம்
கடந்துவந்த கொடுமையையும்
கடக்கவேண்டிய கடுமையையும்...

ஈனம் வீழ்ந்து
ஈழம் வெல்லும் நாள்
எல்லோர்க்கும் தீபாவளி,
அதுவரை இல்லை தீபாவளி...

எதிரிகளின்முன்
மண்டுயிட்டால் அடிமை
உறவுகளின்முன்
மண்டியிட்டால் பெருமை

உறவென்ற உரிமையில்
உளம்திறந்து மண்டியிடுகிறேன்
உணர்ந்து பாருங்கள்...

தவறாய் நினைப்பவர்கள்
மறந்து விடுங்கள்
உறவாய் நினைப்பவர்கள்
மற்றவர்க்கும் சொல்லுங்கள்...
-வேலுச்சாமி

வியாழன், 14 அக்டோபர், 2010

ஏன் மறந்தீர்கள்

மழை இல்லையென்று
கழுதைகளுக்கும் தவளைகளுக்கும்
மணம் முடித்துவைத்த 
மாமேதைகளே, 
ஏன் மறந்தீர்கள் 
விதவைகளை...


வாரிசு வேண்டி
கோயில்வாசம் செய்யும்
கோமான்களே,
ஏன் மறந்தீர்கள் 
அனாதைகளை...


பிறர்முடிவை எதிர்நோக்கும்
சூரர்களே, 
ஏன் மறந்தீர்கள் 
எதிர்வரும் உம்முடிவை...


இயலாதென்று தெரிந்தும்
பொன்னகையை எதிர்பார்க்கும் 
சம்பந்தியரே,
ஏன் மறந்தீர்கள் 
பூவையரின் புன்னகையை...


இருக்கையில் ஓடிவிட்டு
இறந்தபின் ஓலமிடும் 
உறவுகளே,
ஏன் மறந்தீர்கள் 
பாசபந்தத்தை...


பக்தியென்று மூடத்தனமாய்
பிறவுயிர்களை பலியிடும்
பாவிகளே,
ஏன் மறந்தீர்கள் 
உங்கள் உயிரை...


இன்றுஇளமையென்று
முதுமையை உதாசிக்கும்
இளையோரே,
ஏன் மறந்தீர்கள் 
எதிர்வரும் முதுமையை...


ஊனம் தடையென்று
உழைப்பை மறந்த
திறமைசாலிகளே,
ஏன் மறந்தீர்கள்
உங்கள் திறமையை...


பணம் பணமென்று
பணத்தை கட்டியழும்
கருமியரே,
ஏன் மறந்தீர்கள்
பணத்தால் இழந்த பாசத்தை...


நெரிசல்களில்
உரசுவதற்க்கே வரும்
சமூகவிரோதிகளே,
ஏன் மறந்தீர்கள்
பெற்றவளை பிறந்தவளை...


நினைத்தது கிடைகாததால்
நின்றுபோன
நிர்பந்தக்காரர்களே,
ஏன் மறந்தீர்கள்
கிடைத்ததை நினைக்க...


பிறரின் வெற்றியை
இடறும்
இறுமாப்புடையோரே,
ஏன் மறந்தீர்கள்
உங்களின் ஆற்றலை...
                                              _ வேலுச்சாமி